Last Updated : 14 Jun, 2021 04:17 PM

 

Published : 14 Jun 2021 04:17 PM
Last Updated : 14 Jun 2021 04:17 PM

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் தலைமை ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது.

இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது.

அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்தப் பணத்தில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாணவர் சேர்க்கையின்போது அவர்களுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதால் மாணவர் சேரிக்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், "இப்பள்ளிக்கு மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களே சேர்கிறார்கள். இவர்களின் பெற்றோர் தற்போது வாழ்வாதாரம் இழந்து கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார்கள். இந்தத் தொகை அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் " என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x