Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு வரைஅனைத்து விதமான தேர்வுகளும்ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரத்தால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை துரிதமாக முடித்து, பாடங்களை இணைய வழியில் நடத்தபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்கட்டமாக பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர்சேர்க்கை இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவை பள்ளிகள் வழங்க வேண்டும். அதிகவிண்ணப்பங்கள் வரும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 9-ம் வகுப்புமதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் பெற்றோருடன் சென்று பள்ளிகளில் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
சேர்க்கையின்போது கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவும், மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாணவர் சேர்க்கை, மதிப்பெண் பட்டியல்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளைமேற்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்துக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. வெளியூர்களில் இருக்கும் ஆசிரியர்கள் உடனடியாக ஊர் திரும்பி பணிக்குதயாராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை பணிகளை விரைவாக முடித்து, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் கல்வித் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான தயாரிப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT