Published : 10 Jun 2021 01:45 PM
Last Updated : 10 Jun 2021 01:45 PM

பிளஸ் 1 சேர்க்கை; விண்ணப்பங்களுக்கு ஏற்ப கூடுதலான இடங்களை உருவாக்குக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

பிளஸ் 1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வினை ரத்து செய்து விண்ணப்பங்களுக்கு ஏற்ப கூடுதலான இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 10) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வு ரத்து என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து, ஆட்சிக்கு வந்தபின், பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்ற உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து இருப்பதாக வந்திருக்கும் செய்தி, 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

கரோனா தாக்கம் கடுமையாக உள்ள இந்தக் காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், தமிழ்நாடு உட்பட இந்திய நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், முதல்வரே நுழைவுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்ற அறிவுரையை பள்ளிக் கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கியிருப்பது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல் உள்ளது.

ஏனென்றால், வருமானத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, அரசின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், நுழைவுத்தேர்வு எழுதும் மனநிலையில் மாணவ, மாணவியர் இல்லை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், அப்பிரிவுடன் தொடர்புடைய கீழ்நிலை வகுப்புப் பாடங்களில் இருந்து 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவது முன்னுக்குப் பின் முரணான செயல். இதுவும் ஆங்காங்கே கரோனா பரவலுக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், மாணவ, மாணவியர் நலன் கருதி, எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றனவோ, அதற்கேற்ப, கூடுதல் இடங்களை உருவாக்குவதுதான் சரியான வழிமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, 'பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு' என்ற உத்தரவுக்கு எனது கடுமையான எதிர்ப்பினை அதிமுகவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத்தேர்வினை ரத்து செய்து விண்ணப்பங்களுக்கு ஏற்ப கூடுதலான இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x