Published : 09 Jun 2021 07:07 PM
Last Updated : 09 Jun 2021 07:07 PM

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தின்படி, பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. அவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல்15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம்.

மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்புப் பாடங்களில் இருந்து கொள்குறிவகைத் தேர்வு நடத்தி (மொத்தம் 50 வினாக்கள்) அந்த மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கும் தமிழக அரசு, பிளஸ் 1 தேர்வுக்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு நடத்துவதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வழக்கமான வழிகாட்டு நெறிமுறைகளோடு கூடுதலாக ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ''முந்தைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு 10-ம் வகுப்புப் பாடத்தின் அடிப்படையில் எந்தத் தேர்வும் நடத்தத் தேவையில்லை. மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி, பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளின்படி பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்த அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்'' என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரம் வகுப்புகள்

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரத்தில் இருந்து, கரோனா குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்கலாம்.

மேலும் 2021- 2022ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வித் தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்தத் தொடங்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x