Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
சிபிஎஸ்இ போல தமிழக பள்ளிக்கல்வியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னேற்றத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்தமே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்பட இருந்தது. 8.6 லட்சம் மாணவ,மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். இதற்கிடையே, கரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்துசெய்து தமிழக அரசு அறிவித்தது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னேற்றத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
மதிப்பெண் குறைய வாய்ப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்தகால செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் கணிசமான மாணவர்களுக்கு மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே, அரசு வழங்கும் மதிப்பெண்களில் விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு சிபிஎஸ்இ போல முன்னேற்றத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும். கரோனா சூழல் சரியான பிறகு அந்த தேர்வை நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT