Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு வழங்கும் மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள்: பொதுத்தேர்வு ரத்து செய்ததையொட்டி எதிர்பார்ப்பு

திருச்சி

பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இளநிலைபொறியியல் படிப்புக்கான சேர்க்கையை மேற்கொள்ள மாணவர்களுக்கு அரசு வழங்கவுள்ள மதிப்பெண்களுக்காக தனியார் பல்கலைக்கழகங்கள் காத்திருக்கின்றன.

கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை பரவல் அதிகமாகஉள்ளதால், நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வகையில் மதிப்பெண்கள் வழங்குவது என்பதை முடிவு செய்ய சிபிஎஸ்இ, தமிழக அரசு தனித்தனியே குழுக்களை அமைத்துள்ளன. இந்தக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் இளநிலை பொறியியல் படிப்பு உள்ளிட்டவற்றில் மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதில் மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன முடிவு செய்துள்ளன என்பது குறித்து தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களிடம் கருத்துகளை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்யா சுப்பிரமணியம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வழக்கமாக ஜேஇஇ மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் என்ற அடிப்படையிலும் என இரு முறைகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தற்போது சிபிஎஸ்இ, மாநில பாடத் திட்டங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், எந்த வகையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதை பார்த்து, அதன்பிறகு சாஸ்த்ராபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் (இளநிலை கல்வி) கலைச்செல்வன்: எங்களது பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடைபெறுகிறது. ஏற்கெனவே நுழைவுத் தேர்வுஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவிட்டது. விடுபட்ட மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடத்தப்படும். இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இல்லாத பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.

கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு தரஉறுதிப் பிரிவு துணைத் தலைவர் பிரசாந்த் ஆர். நாயர்: சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவர்களுக்கு அவர்கள் கடந்த கால தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படலாம். எங்களது பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே பொறியியல் படிப்புகளில் சேர்க்கை மேற்கொள்ளப்படும். நுழைவுத் தேர்வு எழுத பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு விரைவில் தனித்துவ தொழில்நுட்ப கண்காணிப்புடன் நடத்தப்படவுள்ளது என்றார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக பங்குதாரர் வைஷ்ணவி சங்கர்: கடந்த காலங்களில் பெற்ற பள்ளித் தேர்வுகள் அடிப்படையில் தான் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இறுதித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண்களை பெறலாம் என நினைத்து, தற்போது மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் படிப்பில் சேரும் வகையில் அடுத்த ஆண்டு ஒரு வாய்ப்பை (இம்ப்ரூவ்மென்ட் தேர்வு) வழங்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x