Published : 05 Jun 2021 01:04 PM
Last Updated : 05 Jun 2021 01:04 PM

பிளஸ் 2 தேர்வு; 13 கட்சிப் பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை: அதிமுக சார்பில் செங்கோட்டையன் பங்கேற்பு

சென்னை

தமிழகத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து சட்டப்பேரவையின் 13 கட்சிப் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், குஜராத், ம.பி. உள்ளிட்ட 10 மாநிலங்களிலும் 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாகப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு இறுதி முடிவெடுக்கத் தமிழக அரசு தீர்மானித்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக மாணவர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகப் பள்ளிக் கல்வித்துறைக்குத் தெரிவித்தனர்.

அவற்றில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காணொலியில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சட்டப்பேரவைப் பிரதிநிதிகளுடனும் இன்று ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை கட்சிப் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

முன்னதாகத் தேர்வை நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை கேட்டதாகவும் தகவல் வெளியானது.

13 கட்சிகளின் பிரதிநிதிகள்

சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெற்ற 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் இடம்பெற்றுள்ளனர். ஆளும் கட்சியான திமுக, எதிர்க் கட்சியான அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக, கொமதேக, தவாக, புதிய பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை

இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் தேர்வை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன. எனினும் பாஜக மட்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேர்வெழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களுக்கு 3 ஆயிரம் தேர்வு மையங்கள் போதாது, 100 மாணவருக்கு ஒரு தேர்வு மையம் என்ற வகையில் குறைந்தபட்சம் 9,000 தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவர் தனது இருப்பிடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வின் நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாகக் குறைக்க வேண்டும், விரிவான விடை அளித்தல் என்பதைத் தவிர்த்து எளிமையான முறையில் விடை அளிக்கும் வகையில் வினாத்தாள் இருக்கவேண்டும், மலைவாழ் மக்களின் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும், கேள்வித்தாள் வடிவமைப்பை எளிமைப்படுத்த வேண்டும், மொழிப் பாடங்களை ரத்து செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கலாம் என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பின்பு, ஜூலை மாதத்திற்குப் பிறகு தேர்வை நடத்தலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை இறுதி முடிவு

கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிபுணர்களுடனும் உளவியல் நிபுணர்களுடனும் அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, அந்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்குப் பிறகு இன்று மாலை முதல்வர் இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் என அனைத்துத் தரப்பு கருத்துகளின் அடிப்படையில் தேர்வு நடத்துவது பற்றி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்கெனவே தேர்வு நடந்து முடிந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுத் தேர்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x