Published : 04 Jun 2021 07:40 PM
Last Updated : 04 Jun 2021 07:40 PM

பிளஸ் 2 தேர்வு; அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளிடமும் கருத்துக் கேட்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

பிளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளிடமும் நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணிக்குக் கருத்து கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் பள்ளிக் கல்வித்துறை கருத்துகளைக் கேட்டு வருகிறது.

இதையடுத்து இன்று மாலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''12-ம் வகுப்புத் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைத் தமிழக முதல்வர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். தற்போது 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

களத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் உண்மையான கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்து பேசினோம். கூட்டத்தின் இடையில் பேசிய முதல்வர், கல்வியாளர்களிடமும் கருத்துகளைக் கேட்க அறிவுறுத்தினார். அதேபோல சட்டப்பேரவைக் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் கருத்துகளைப் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒரு பிரதிநிதியை நியமித்து அவர்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் அனைத்து பிரதிநிதிகளிடமும் காணொலிக் காட்சி மூலம் தொடர்புகொண்டு ஒரு மணி நேரம் ஆலோசனை பெறப்படும்.

மருத்துவ, உளவியல் நிபுணர்களிடம் கருத்துக் கேட்பு

அதேபோல நாளை மதியம் 1 முதல் 1.30 மணி வரை மருத்துவ நிபுணர்களிடமும் உளவியல் நிபுணர்களிடமும் கருத்து கேட்கப்படும்.

ஏற்கெனவே இன்று கல்வியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, அந்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்குப் பிறகுதான் முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x