Published : 02 Jun 2021 06:01 PM
Last Updated : 02 Jun 2021 06:01 PM

குஜராத், ம.பி.யில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. ஜூன் 1-ம் தேதி தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தொற்றுப் பரவல் முழுவதும் குறையாத சூழலில், பிரதமர் மோடி நேற்று (ஜூன் 1) மாலை மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.

எனினும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விமர்சனமும் கிளம்பி வருகிறது. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து குஜராத் மாநிலக் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் கூறும்போது, ''கரோனா பரவலால் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. எனினும் சூழலைக் கருத்தில் கொண்டு தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் அறிவியல் பிரிவில் படித்துவந்த 1.4 லட்சம் மாணவர்களும் பொதுப் பிரிவில் படித்துவந்த 5.43 லட்சம் மாணவர்களும் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி செய்யப்படுவர்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்திலும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் கூறும்போது, ''பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் உயிர்தான் தற்போது முக்கியமானது. அவர்களின் எதிர்காலம் குறித்துப் பிறகு கவலைப்பட்டுக் கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து சரியான அறிவிப்பை வெளியிடுவர்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x