Last Updated : 28 May, 2021 05:21 PM

 

Published : 28 May 2021 05:21 PM
Last Updated : 28 May 2021 05:21 PM

பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும்; நேரடித் தேர்வுதான்; தேதியை மாநில அரசே முடிவு செய்யும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது. நேரடியாக நடைபெறும். தேர்வுத் தேதியை மாநில அரசே முடிவு செய்யும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும். மாவட்டங்கள்தோறும் கரோனா பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. எனவே, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி பிளஸ் 2 தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு ஆன்லைனில் நடைபெறாது; நேரடியாக நடைபெறும்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளிக் கல்வித்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலரும், நானும் கலந்து கொண்டோம். முதல்வர் அறிவுறுத்தியபடி பல்வேறு கருத்துகளை நாங்கள் முன்வைத்தோம். அனைத்து மாநிலங்களும் சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவர்களை மனதில் வைத்துப் பேசிய நிலையில், நாங்கள் மட்டும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களை மனதில் வைத்துப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வுத் தேதியை மாநில அரசே முடிவு செய்துகொள்வோம் என்று கூறினோம்.

கரோனா பரவல் தடுப்புப் பணியில் விரும்பும் ஆசிரியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கல்வித் துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x