

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடம் நாளை (மே 18) காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த ‘தேசிய கல்விக் கொள்கை-2020’க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. கரோனா பரவல் சூழல் கருதி 2021-ம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக் கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையைப் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்துவது குறித்து மாநிலக் கல்வித்துறைச் செயலர்கள், பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநிலக் கல்வித்துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி வழியாக இன்று (மே 17) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலக் கல்வி அமைச்சர் பங்கேற்க அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு மே 15-ம் தேதி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்காத நிலையில், ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் நாளை (மே 18) மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல், இணையவழிக் கற்பித்தல் மேம்பாடு, கரோனா பரவல் கல்வித் துறையில் ஏற்படுத்திய பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்துக் கலந்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய கல்வியாண்டில் துறைரீதியாகப் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்குத் தற்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.