Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் நாளை (மே 17) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த ‘தேசிய கல்விக் கொள்கை-2020’-க்கு மத்திய அரசு கடந்தாண்டு ஒப்புதல்அளித்தது. கரோனா பரவல் சூழல்கருதி 2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக்கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
கல்வி துறை செயலர்கள் பங்கேற்பு
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துதல், இணையவழி கற்பித்தல் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நாளை(மே 17) நடைபெறவுள்ளது. இந்தகூட்டத்தில் அனைத்து மாநில கல்வித் துறை செயலர்களும் பங்கேற்பார்கள்.
இதில் கரோனா பரவல், கல்வித்துறையில் ஏற்படுத்திய பாதிப்பு, கல்விக் கொள்கையை அமல்படுத்துதலில் மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலங்களின் கருத்துகள்கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் புதிய கல்வியாண்டில் துறைரீதியாக பல்வேறு மாற்றங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு தற்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT