Published : 04 May 2021 04:43 PM
Last Updated : 04 May 2021 04:43 PM

கரோனா தீவிரம்: ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. முதுகலை நீட் தேர்வு, சிஐஎஸ்சிஇ வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

அதேபோல ஏப்ரல் மாதத்தில் 27 முதல் 30-ம் தேதிவரை நடக்க இருந்த ஜேஇஇ ஏப்ரல் மாத மெயின் நுழைவுத்தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதத்துக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. கரோனா பரவலால் மே மாதத் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை முன்னிறுத்தியும் ஜேஇஇ மெயின் தேர்வு மே மாதம் நடக்க இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள், தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) இணையதளத்தைக் காணலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் உடல்நலன், தேர்வு நடத்தும் பணியாளர்கள் ஆகியோரின் உடல்நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு இம்மாதம் இறுதியில் நடக்க இருந்தது ஒத்தி வைக்கப்படுகிறது.

ஏப்ரல் மற்றும் மே மாத நுழைவுத்தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும், மே மாதத் தேர்வுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய நாள் குறித்தும் பிறகு தெரிவிக்கப்படும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x