Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு குறித்த முக்கிய முடிவுகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன (ஐசிஏஐ) உறுப்பினர்தீரஜ் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
பட்டய கணக்காளராக விரும்புவோர் ஐசிஏஐ நடத்தும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டய கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 24, 26, 28, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20-ம் தேதிதொடங்கியது. அதன்படி, மே 4-ம் தேதி வரையும், தாமதக் கட்டணம் செலுத்தி மே 7-ம் தேதி வரையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக, முதல்நிலைத் தேர்வு முடித்தவர்களுக்கான இடைநிலைத் தேர்வுகள் மே 21-ம் தேதியிலிருந்தும், இறுதித் தேர்வுகள் மே 22-ம் தேதியிலிருந்தும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால், சிஏ-வின் இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலிருந்து கேள்விகள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஐசிஏஐ உறுப்பினர் தீரஜ்கண்டேல்வால் தனது ட்விட்டர் பதிவில், “சிஏ-2021 தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய தொற்று பாதிப்பை தேர்வுக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அதன்படி, தேர்வு நடத்துவதற்கான முக்கிய முடிவுகள் குறித்துஏப்ரல் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும். எனவே, தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கடினமாகப் படிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT