Published : 25 Apr 2021 06:03 AM
Last Updated : 25 Apr 2021 06:03 AM

ஆய்வு மேற்கொள்ள நிதியுதவியும் கிடைக்கும்; அஸ்ட்ரோசாட் தரவுகளை பெற விண்ணப்பிக்கலாம்: வானியல் ஆய்வாளர்களுக்கு இஸ்ரோ அழைப்பு

நாடு முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளின் தரவுகளைப் பெற மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும்.

இஸ்ரோ சார்பில் வானியல் ஆய்வுக்காக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள்ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2015, செப்.28-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புறஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரேகதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய அஸ்ட்ரோசாட் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள், தரவுகள் உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் இஸ்ரோ வெளி
யிட்டு வருகிறது. இவை பல்வேறு முக்கிய அறிவியல் ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள் மூலம், பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளிஆண்டுகள் தொலைவில் நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பது கடந்தஆண்டு கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அஸ்ட்ரோசாட்டின் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘நாடு முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளின் தரவுகளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் திட்ட ஆய்வறிக்கை விவரங்களை மே 31-ம் தேதிக்குள் sspo@isro.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதில் தேர்வாகும் நபர்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும். இதற்கான தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’’ என்று கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x