Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஏப்ரல் இறுதியில் நடக்க இருந்த ஜேஇஇ தேர்வு தள்ளிவைப்பு: கரோனாவால் மத்திய அரசு நடவடிக்கை

கரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் இறுதியில் நடக்க இருந்த ஜேஇஇ முதல்நிலை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில், முதல்நிலை தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ)நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.அடுத்ததாக, ஏப். 27, 28, 30-ம் தேதிகளில் தேர்வு நடக்க இருந்தது.இதற்கிடையே, நாடு முழுவதும்கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்ட பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ஜேஇஇ முதல்நிலைத் தேர்வும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கரோனா பரவல் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்தில்நடக்க இருந்த ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி விவரம், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.

தேர்வுக்கு நன்கு தயாராவதற்கு மாணவர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in,jeemain.nta.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x