Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

ஆசிரியர்களின் கோரிக்கைப்படி வாரத்தில் 5 நாட்களே பள்ளிகள் செயல்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள்தாமதமாக கடந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. கல்விஆண்டு தாமதத்தை ஈடுசெய்ய வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகள் கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தன.

மாணவர் வருகை குறைவு

அதேநேரம் வார இறுதிநாளான சனிக்கிழமையில் மாணவர் வருகைப்பதிவு குறைவாக இருப்பதால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதைஏற்று பள்ளி வேலை நாட்கள்மீண்டும் 5 தினமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கடந்த ஏப்.16-ம் தேதிகாணொலிக் காட்சி வழியாகநடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைத்துவித பள்ளிகளும், வரும் காலங்களில் வாரத்துக்கு 5 வேலை நாட்கள் மட்டுமே செயல்படும். வழக்கம்போல, சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

செய்முறைத் தேர்வுகள்

தற்போது பள்ளிகளில் 12-ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் நடந்து வருகிறது.எனினும், கரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும்.

செய்முறைத் தேர்வு முடிந்தபின் மாணவர்களை வீட்டிலிருந்து பொதுத் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்த வேண்டும். அதேபோல், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பணிகளை உரிய முறையில் தீவிரப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x