Published : 16 Apr 2021 07:47 PM
Last Updated : 16 Apr 2021 07:47 PM

கரோனாவால் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

கரோனா தொற்றுப் பரவலால், ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கரோனா சூழலைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஐஎஸ்சிஇ வாரியத்தில் 10-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. 12-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு பொதுத் தேர்வின்போதும் கரோனா பரவலால் சிஐஎஸ்சிஇ வாரியம், தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x