Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

சிபிஎஸ்இ-யை பின்பற்றி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்

சென்னை

மத்திய அரசைப் பின்பற்றி, தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வரும்சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்புபொதுத் தேர்வை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இம்முடிவை தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது.

மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதிபிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும். ஏனென்றால் கரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஏற்கெனவே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவிவருகிறது. அதனால், உடனடியாக மத்திய அரசை பின்பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எனஅனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசும் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x