Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
பி.ஆர்க் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை கட்டிடவியல்(பி.ஆர்க்) படிப்புக்கான சேர்க்கை,ஜேஇஇ மற்றும் கட்டிடவியலுக்கான தேசிய திறனறிவுத் தேர்வு (நாட்டா) அடிப்படையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமா படித்தவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்நிலையில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு பி.ஆர்க்.சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, பி.ஆர்க் சேர்க்கைக்கு பிளஸ் 2-ல் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஏப்ரல் மாதத்துக்கான நாட்டா தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி மாதம் தொடங்கியது.
அதன்படி, நாடு முழுவதும் நாட்டா தேர்வு நாளை (10-ம்தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை http://www.nata.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நாட்டா தேர்வு நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, 2-ம் கட்டநாட்டா தேர்வு ஜூன் 12-ம் தேதிநடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT