Published : 25 Mar 2021 01:37 PM
Last Updated : 25 Mar 2021 01:37 PM

தபால் வாக்குகள் முறையாகக் கையாளப்படுகிறதா?- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி

தபால் வாக்குகள் முறையாகக் கையாளப்படுகிறதா என்பதில் சந்தேகம் எழுவதாகத் தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இன்று நடந்தது. கூட்டத்துக்குக் கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர் ஜோஸ்வா தலைமை வகித்தார். கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தபால் வாக்குப் பதிவு தொடர்பாகத் தமிழகத் தேர்தல் ஆணையருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டது.

இது குறித்து ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குன்வர் ஜோஸ்வா கூறும்போது, ’’தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்குப் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நூறு சதவீதத் தபால் வாக்குப் பதிவை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய முன்வர வேண்டும்.

தேர்தல் பணிக்கு வரும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் வாக்கைச் செலுத்தி விடுகின்றனர். ஆனால் வாக்கு எண்ணும் மையங்களில் குறைந்த சதவீத வாக்குகளே பதிவாகி வருகின்றன. அஞ்சல் பெட்டி மூலம் அனுப்பப்படும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் முறையாக வாக்கு எண்ணும் இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது.

எனவே சாதாரண அஞ்சல் பெட்டி மூலம் தபால் வாக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தபால் வாக்குகள் பெறப்படும் அலுவலகங்களில் தபால் வாக்குகள் பதியப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தபால் வாக்குகளுக்கான உரிமைகளைத் தேர்தல் ஆணையமே வழங்கும்போது தபால் வாக்குகளில் கெஸட் அதிகாரி கையெழுத்து கட்டாயம் என்பதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி, கடிதம் எழுதி உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x