Published : 20 Mar 2021 08:29 PM
Last Updated : 20 Mar 2021 08:29 PM

பிளஸ் 2 தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு என்ன?- கல்வித்துறை வழிகாட்டுதலை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள், பெற்றோர்

பிளஸ் 2 தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு என்னவென்பது குறித்து கல்வித்துறை வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள், கரோனா தொற்று குறைந்ததால் 10, 12-ம் வகுப்புகள் கடந்த ஜனவரி 19-ம் தேதி திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8,9,11-ம் வகுப்புகள் பிப்ரவரி 8-ம் தேதி திறக்கப்பட்டது. இதற்கிடையில் ப்ளஸ்-டூ தேர்வுகள் வரும் மே 3ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் செயற்முறைத் தேர்வுகள், அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2 வாரமாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா பரவியதால் பெற்றோர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வடமாநிலங்களில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதுபோல் மீண்டும் தமிழகத்தில் பரவி மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 22ம் தேதி முதல் 9, 10 மற்றும் ப்ளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ்-டூ பொதுத்தேர்வு நடப்பதால் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறைவிடப்பட்ட 9, 10 மற்றும் ப்ளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இல்லாவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறியுள்ளனர்.

தற்போது மாணவர்களுக்கு கரோனா பரவுவதால் அவர்களுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு அவர்களுக்கு தொற்று பரவாமல் தடுத்துள்ளனர்.

அதுபோல் கரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சையும், சிறப்பு கண்காணிப்பும் சுகாதாரத்துறை அளித்துவருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் செயற்முறைத் தேர்வும், அதற்கு அடுத்த மாதம் மே 3ம் தேதி எழுத்துத் தேர்வும் தொடங்கும்போது இதேபோல் ஏதாவது மாணவர்களுக்கு கரோனா தொற்று வந்தால் அந்த மாணவர்களுக்கு எப்படி செய்முறை, எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் கரோனா தொற்று ஏற்பட்டால் சம்ந்தப்பட்ட தேர்வு மையத்திற்கும், அங்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை இதுவரை கல்வித்துறை அறிவிக்கவில்லை.

இது பிளஸ்-2 தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள், அவர்கள் பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு நேரத்தில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று வந்தால் அந்த மாணவர் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு வருவது கஷ்டம். அப்படி வர முடியாதளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா?, அந்தத் தேர்வு மையத்தில் மற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வு நடத்தப்படுமா? உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அச்சம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எங்களிடம் கேட்கின்றனர். அவர்களுக்க்ய் உரிய பதிலை எங்களால் வழங்க முடியில்லை, ’’ என்றனர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அடுத்த மாதம் செய்முறைத் தேர்வுக்கு முன் வழிகாட்டுதல் வர வாய்ப்புள்ளது. இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் இல்லை, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x