Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

சென்னை ஐஐடியின் கல்வித் தரத்தை உயர்த்த வழிகாட்டி வாரியம் அமைப்பு

சென்னை

சென்னை ஐஐடியின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் பழைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் துறை நிபுணர்களைக் கொண்டு கல்வி ஆலோசனை வாரியம் என்ற புதிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த நிபுணர்கள் கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஐஐடிக்கு இந்த வாரியம் வழிகாட்டும். இதன்மூலம் சென்னை ஐஐடி உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும். ஐஐடிக்கு மத்திய அரசின் சீர்மிகு சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்குரிய செயல் திட்டங்களையும் உத்திகளையும் பின்பற்றுவதற்கும் புதிய அமைப்பு உதவும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, ``உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ வேண்டும் என்ற ஐஐடியின் கனவை நனவாக்க புதிய வழிகாட்டி வாரியம் உதவிகரமாக அமையும்'' என்றார்.

மேலும், ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றவும் புதிய வாரியம் இணைப்பு பாலமாக திகழும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x