ஆளில்லா குட்டி விமானத்தை ஆர்வமாய் உருவாக்கிய நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆளில்லா குட்டி விமானத்தை ஆர்வமாய் உருவாக்கிய நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்க இன்று நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க உதவியுடன் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்க நேரடிப் பயிற்சி இன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்புத் தலைமை ஆசிரியை ரெங்கநாயகி வரவேற்புரை வழங்கினார்.

சென்னையில் தனியார் ட்ரோன் பயிற்சியாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, குட்டி விமானத்தை உருவாக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். குட்டி விமானங்கள் உதிரி பாகங்களாகக் கொடுக்கப்பட்டு அதை மாணவர்களே உருவாக்கும் வகையில் நேரடிப் பயிற்சி (Hands on training) வழங்கப்பட்டது.

பயிற்சியினை இஸ்ரோவில் இளநிலை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் சுகம் வர்மா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பயிற்சி தொடக்க விழாவில் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுரேந்தர், அரிமா கூடலிங்கம் மற்றும் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் கருணைதாஸ் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in