Published : 13 Mar 2021 05:40 PM
Last Updated : 13 Mar 2021 05:40 PM

நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வா?- சமூக நீதிக்கு எதிரானது; ஜவாஹிருல்லா கண்டனம்

நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது என்றும் இதை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும், மாணவர்களின் திறன் மேம்பாடு என்ற போர்வையிலும் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை அனைத்து மட்டக் கல்வியிலும் சமூக நீதிக்கு எதிராக, ஏழை எளிய மக்கள் கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் செயல் திட்டத்தைப் படிப்படியாகச் செயல்படுத்தி வரும் மத்திய அரசு, விளிம்புநிலை மக்கள் பெருமளவில் பயிலும் நர்சிங் (செவிலியர்) படிப்புக்கும் இனி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு மனசாட்சி இல்லை என்பதையே காட்டுகிறது.

எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வைத் திணித்து பலநூறு ஏழை மாணவர்களின் எதிர்கால டாக்டர் கனவுகளைச் சிதைக்கும் மத்திய அரசு, தற்போது பி.எஸ்.சி. நர்சிங்., பி.எஸ்.சி. லைஃப் சயின்ஸ் ஆகிய செவிலியர் பணிகளுக்கான படிப்புகளுக்கும் இந்த 2021-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நயவஞ்சகத்தின் உச்ச கட்டமாகும்.

உயிர் காக்கும் மருத்துவச் சேவைகளில் முன்களப் பணியாளர்களில் முதன்மையானவர்கள் செவிலியர்தான். நாட்டில் உள்ள செவிலியர்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயங்களைச் சார்ந்தோர் என்பதையும், நர்சிங் கல்வி பயில்வதிலும் பெரும்பான்மையோர் இந்தச் சமுதாயங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் வாரிசுகள் என்பதையும் நன்கறிந்த பாஜக அரசு, இந்த விஷம் கக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு என்ற அறிவிப்பும், உயர் சாதியினர் என்று சொல்லப்படும் சொற்ப அளவில் உள்ள இனத்தினர் மற்றும் பெரும் செல்வந்தவர்களின் குழந்தைகள் மட்டுமே இனி மருத்துவர்களாக முடியும் என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பது போன்று உள்ளது.

நர்சிங் உட்பட பி.எஸ்.சி. போன்ற இளங்கலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது''.

இவ்வாறு எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x