Last Updated : 01 Mar, 2021 08:32 PM

 

Published : 01 Mar 2021 08:32 PM
Last Updated : 01 Mar 2021 08:32 PM

புதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 3 முதல் பள்ளிகள் முழுநேரமும் இயங்கும்: கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் வரும் 3-ம் தேதி முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்று கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் புதுவையில் 9 -12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கும் வகையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

இதனையடுத்துக் கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி இளங்கலை, முதுகலை படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் செயல்பட்டன. 1, 3, 5, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் 3-ம் தேதி முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12-ம் வகுப்புகள் அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x