Published : 27 Feb 2021 12:45 PM
Last Updated : 27 Feb 2021 12:45 PM

ஜேஇஇ மெயின் தேர்வை 88% பேர் எழுதினர்: என்டிஏ

புதுடெல்லி

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வுக்கு 6.6 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 88% பேர் தேர்வெழுதியதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்), ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 23 தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது.

நாடு முழுவதும் 9 நகரங்களில் 331 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இதுதவிர்த்து இந்தியாவுக்கு வெளியே கொழும்பு, தோஹா, காத்மண்டு, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர், குவைத், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களிலும் மாணவர்கள் தேர்வை எழுதினர்.

இதில் கட்டிடவியலுக்கான இளங்கலைப் படிப்பும் வடிவமைப்புக்கான இளங்கலைப் படிப்புக்கான தேர்வும் இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தேர்வுக்கு 6,61,776 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும் அதில் சராசரியாக 88% பேர் தேர்வெழுதியதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

குறிப்பாக கட்டிடவியலுக்கான முதல் தாளை 95% பேர் எழுதியதாகவும், வடிவமைப்புக்கான இரண்டாம் தாளை 81.2% பேர் எழுதியதாகவும் என்டிஏ தெரிவித்துள்ளது.

இத்தேர்வு முதல் முறையாக ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் மார்ச் 7- தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x