Published : 25 Feb 2021 04:56 PM
Last Updated : 25 Feb 2021 04:56 PM

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 9- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிப்.28 அன்று ஓவியப் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 2021, பிப்ரவரி 28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் மாணவர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஓவியம் வரைவதற்கான சார்ட் காகிதம் அருங்காட்சியகத்தால் வழங்கப்படும்.

மேலும், வரைவதற்குரிய பொருட்கள் மற்றும் உபகரணங்களை அவர்களே கொண்டுவர வேண்டும். மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் அடையாள அட்டை மற்றும் அதன் நகல் ஒன்றினையும் கொண்டு வரவேண்டும்.

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள்- உலக நினைவுச் சின்னங்கள் / அறிவியலும் மனிதனும் / தமிழ்ப் பாரம்பரியம்/ தேசிய நினைவுச் சின்னங்கள் என்ற தலைப்பில் வரைய வேண்டும்

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் - எனது பார்வையில் எதிர்கால இந்தியா / கடல் உலகம் / கிராமக் காட்சிகள் / இந்தியப் பாரம்பரியம் என்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தலாம்.

மாணவ, மாணவியர்களை மேற்படி போட்டிகளில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்''.

இவ்வாறு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x