Published : 23 Feb 2021 08:18 PM
Last Updated : 23 Feb 2021 08:18 PM

6- 8ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பு: தெலங்கானா அரசு அறிவிப்பு

6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது நாளை (பிப்.24) முதல் 6 மற்றும் 8-ம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும் சேர்த்து 17.24 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருவர். முன்னதாக மாநில அரசு கரோனா முன்னெச்சரிக்கை குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரவேண்டும். குழந்தைகள், ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதிக மாணவர்கள் இருக்கும் சூழலில் மாற்று நாட்களில் வகுப்புகள் நடைபெற வேண்டும். கை கழுவுதல், தனிமனித இடைவெளி மற்றும் பிற கோவிட்-19 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x