Published : 18 Feb 2021 12:39 PM
Last Updated : 18 Feb 2021 12:39 PM

தேர்வு பயத்தைப் போக்க மார்ச் மாதம் மாணவர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வுகள் பற்றிய கலந்துரையாடலை நடத்தப் பிரதமர் மோடி 9- 12ஆம் வகுப்பு மாணவர்களை மார்ச் மாதம் சந்திக்கிறார். இது தொடர்பாக நடைபெற உள்ள போட்டிக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அது சம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். அவர்களுக்கு சான்றிதழும் பரிக்‌ஷா பே சார்ச்சா உபகரணமும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று, பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி மார்ச் மாதம் கலந்துரையாட உள்ளார். இந்தத் தகவலை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். எனினும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்18) தொடங்கி உள்ளது. மாணவர்கள் மார்ச் 14-ம் தேதி வரை innovateindia.mygov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

போட்டி விவரங்களைக் காண: https://innovateindia.mygov.in/ppc-2021/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x