Published : 16 Feb 2021 05:42 PM
Last Updated : 16 Feb 2021 05:42 PM

மாணவர்களுக்கு சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை 

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்து தமிழ் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தணிக்கையாளர் அருளானந்தம், ''வழக்கமாக மாநிலம் முழுவதும் வார நாட்களில் மாணவர்களின் வருகை 90 முதல் 95% ஆக உள்ளது. ஆனால் சனிக்கிழமை அன்று 50 முதல் 70% மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்.

10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடச் சுமை அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே அவர்கள் மன இறுக்கத்தில் உள்ளனர். இதனால் சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், வார நாட்களில் உயர் வகுப்பு மாணவர்களும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடுகின்றனர். சனிக்கிழமை சத்துணவு இல்லை என்பதாலும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வருவதில்லை. இதனால் அந்த நாளில் எடுக்கப்படும் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர்வதில்லை.

பொதுமுடக்க காலத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டதால், மாணவர்கள் வாரத்துக்கு 5 நாட்களில் கற்றல் பணிகளில் ஈடுபட்டால் போதும் என்பது எங்களின் கருத்து.

அதேபோல கற்றல் இழப்பை எதிர்கொண்ட இந்த ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கேள்வித் தாளை, அரசு எளிமையாக வடிவமைக்க வேண்டும். மாதிரிக் கேள்வித் தாள்களையும் வெளியிடலாம்.

மேலும் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதிகளையும் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இரண்டு தேர்வுகளுக்கு இடையே அதிக கால இடைவெளியை விட வேண்டும்'' என்று அருளானந்தம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x