Published : 16 Feb 2021 03:13 PM
Last Updated : 16 Feb 2021 03:13 PM

ஈரோடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 12-வது நாளாகப் போராட்டம்

ஈரோடு

கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் 12-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு உதவி பெறும் கல்லூரியாக 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது இந்த மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, 2020-ல் அரசாணை வெளியிட்ட பிறகும் இங்கு கல்விக் கட்டணமாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசுக் கல்லூரியில் வசூலிக்கும் ரூ.13 ஆயிரத்து 610 மட்டுமே கல்விக் கட்டணமாகக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கோரிக்கையை முன்வைத்து பிப்ரவரி 5-ம் தேதியன்று மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தினந்தோறும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்குமாறும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்களை நெறிமுறைப்படுத்தியும் அரசு உத்தரவிடும்வரை தங்களின் அமைதிப் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x