Published : 16 Feb 2021 01:42 PM
Last Updated : 16 Feb 2021 01:42 PM

பொதுத்தேர்வு விவரங்களைப் பதிவு செய்ய பள்ளிகளுக்குக் கூடுதல் அவகாசம்: தேர்வுத் துறை அறிவிப்பு 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்து பதிவேற்றுவதற்குப் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

2020- 2021ஆம் கல்வியாண்டிற்கான 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுக் கட்டணம் குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விற்கான கட்டணம் ரூ.115 ஆகவும், செய்முறை கொண்ட பாடங்களடங்கிய தொகுப்பில் பயிலும் மாணவர்களின் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான கட்டணம் ரூ.225 ஆகவும் , செய்முறை அல்லாத பாடங்களடங்கிய தொகுப்பில் பயிலும் மாணவர்களின் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான கட்டணம் ரூ.225 ஆகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழ் வழியில் பயில்வோர், SC/SCA/ST மற்றும் SC Converts (SS), MBC/DC, கண் பார்வையற்றோர் மற்றும் கேட்கும் / பேசும் திறனற்றோர் ஆகியோருக்கும் மட்டும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத்தைப் பெறவும், அதுகுறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்யவும் பிப்ரவரி 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இன்னும் சில பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலும், விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனால் பொதுத் தேர்வு விவரங்களைப் பதிவு செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 18-ம் தேதி வரை, தேர்வுத் துறை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி கால அவகாசத்தை நீட்டித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x