

சிக்கிம் மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச தற்காப்புப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வித் துறை சிறப்புச் செயலாளர் பிம் தடால் நேற்று (பிப்ரவரி 14) சம்டாங் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்காக நடைபெற்ற இலவச தற்காப்புப் பயிற்சி விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இதுதொடர்பாக அவர் கூறும்போது, ’’பெண் மாணவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
வருங்காலப் பிரச்சினைகளை அவர்களாகவே தீர்த்துக் கொள்ளும் வகையிலும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகையிலும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக டேக்வாண்டோ, கராத்தே, குத்துச்சண்டை, பாக்ஸிங் உள்ளிட்ட பயிற்சிகளை அரசு வழங்கும்’’ என்று பிம் தடால் தெரிவித்தார்.