சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: விண்ணப்பிக்கத் தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: விண்ணப்பிக்கத் தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தனித்தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிகள் செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தனித்தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாடு முழுவதும் 2021-ல் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தனித்தேர்வர்களுக்குக் கடைசியாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அதன்படி இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் பிப்.22 முதல் பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் மட்டுமே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு மேல் விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in