Published : 13 Feb 2021 10:46 AM
Last Updated : 13 Feb 2021 10:46 AM

முதுகலைப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 அன்று தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து வந்தனர். இதற்கான கடைசித் தேதி பிப்.12 ஆக இருந்தது.

இந்நிலையில் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 23ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை மார்ச் 5-ம் தேதி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x