Published : 11 Feb 2021 12:44 PM
Last Updated : 11 Feb 2021 12:44 PM

பணியில் வெளிமாநிலத்தவர் தேர்வு சர்ச்சை: என்எல்சி நிறுவனம் விளக்கம்

GET தேர்வில் அதிகளவில் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்யக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்காக 2020-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிர்வாகப் பட்டதாரி பயிற்சியாளர் (GET- Graduate Excutive Trainee) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 259 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்றன.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.

வெளிமாநிலத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில், தமிழகத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெற்றிருப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாகத் தேர்வு பெற்றுள்ள 1,582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே என்பது வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம் என்பதால் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வின்போது வாரியத்தின் ஆட்சேர்ப்புக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன.

நாடு முழுவதும் 105 நகரங்களில் 261 மையங்களில் நடந்த தேர்வின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. தேர்வெழுதிய தேர்வர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மொபைல் போன்கள் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் ஜேமர்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வை வெளிப்படையாக நடத்தி உள்ளோம். இதற்காக தேர்வுக்கான முன்பதிவு, தேர்வு, மதிப்பீடுகள் ஆகியவை ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன.

தேர்வு முடிந்ததும் தேர்வர்கள் தங்களின் விடைத்தாளை அசல் விடைத் தாளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x