Last Updated : 09 Feb, 2021 01:18 PM

 

Published : 09 Feb 2021 01:18 PM
Last Updated : 09 Feb 2021 01:18 PM

பெருந்தொற்றில் எந்தக் குழந்தையும் ஆன்லைன் கல்வியில் இழப்பைச் சந்திக்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

புதுடெல்லி

பெருந்தொற்றுக் காலத்தில் எந்தக் குழந்தையும் ஆன்லைன் கல்வியில் இழப்பைச் சந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் நேற்று (பிப்.8) கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

''ஆன்லைன் கல்வியை வழங்குவதில் இந்தியா பல்வேறு நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. 5 வயதில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது.

மேலும் பள்ளிக் கல்விக்கு 12 சேனல்களும் உயர் கல்விக்கு 22 சேனல்களும் என 34 கல்வித் தொலைக்காட்சிகள் நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் கல்விக்கோ, தொலைக்காட்சிக்கோ வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு சாலையோரப் பள்ளிகள் மூலம் கல்வி வழங்கப்பட்டது.

இந்தியாவில் பெருந்தொற்றுக் காலத்திலும்கூட எந்த ஒரு குழந்தையும் கல்வி மற்றும் ஆன்லைன் கற்றலில் இழப்பைச் சந்திக்கவில்லை.

ஏராளமான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. கல்வி எல்லாப் பக்கமும் சென்றடைந்து விட்டது. நிஜத்தில் கற்றல் இடைவெளி எங்கும் இல்லை.

ஆன்லைன் கல்விக்கு அரசுத் தரப்பில் இருந்து ரூ.600 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு மோடி அரசிடம் இருந்து எவ்வித நிதிப் பற்றாக்குறையும் ஏற்படாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்''.

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x