Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு அனைத்து கல்லூரிகளிலும் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்

9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன. அதேபோல், கலைக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பமாகின்றன. மாணவர்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டஅனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 3-வது வாரத்தில் மூடப்பட்டன. எதிர்பாராத தொடர்விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பள்ளிமாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று கல்லூரிமாணவர்களுக்கும் இணையவழியிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன.

கரோனா பாதிப்பு குறைவு

கரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவந்த நிலையில், முதல்கட்டமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிச. 7-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன. 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஓர் அறையில் 25 பேர்

அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக் கவசம் அணிந்துதான் தினமும் பள்ளிக்குவருகின்றனர். பள்ளி நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டுஉடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். வகுப்பறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில்ஓர் அறையில் அதிகபட்சம் 25 பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 8-ம் தேதி (இன்று) முதல்வகுப்புகள் நடைபெறும் என்றும்அதேபோல், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்லூரிகளும் பிப். 8 முதல் செயல்படும் என்றும் தமிழக அரசு கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது.

பெற்றோரின் அனுமதி கடிதம்

அதன்படி, பள்ளிகளில்9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (திங்கள் கிழமை) வகுப்புகள் ஆரம்பிக்கப் படுகின்றன. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரின் அனுமதி கடிதத்தைகட்டாயம் பெற வேண்டும் என்றுஅனைத்து தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் செயல்பட உள்ளன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கெனவே கடந்த டிச. 8-ம் தேதியிலிருந்து வகுப்புகள் நடந்து வருகின்றன.

எனவே, கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்லை படிப்புகளில் முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் முதுகலை படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 2-ம், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x