Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்க வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கொண்டு பொறியியல்,தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை கற்பிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:

புதிய பாடத் திட்டம்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை மேம்படுத்தவும் தொழில்துறையின் தேவைகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் புகழ்பெற்ற நிபுணர்களின் உதவியுடன் இந்திய ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் பரிந்துரை செய்த புத்தகங்களை அடிப்படையாக கொண்டு புதிய பாடத்திட்டத்தை ஏஐசிடிஇ, கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கியது.

பொறியியல், தொழில்நுட்பத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக இந்தியஎழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தைஅனைத்து பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் கருத்தாக்கங்களின் சிறந்த கற்றல் வழிமுறைகள் மூலம் தங்களின் தரத்தை உயர்தரமான மற்றும் செலவு குறைந்த இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களால் மேம்படுத்த முடியும் என்று ஏஐசிடிஇ நம்புகிறது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தும்போது இந்திய புத்தகங்கள் உலக அளவில் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் தன்னிறைவு இந்தியா திட்டம் வெற்றி பெறும். எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்த இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை கற்பித்தல் பணியில் பயன்படுத்த முன்வரவேண்டும். அதன்படி, http://www.aicte-india.org/sites/default/files /list-suggested-books-indian-authors-publishers.pdf என்ற இணையதள முகவரியில் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் விவரங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் பரிந்துரை செய்த புத்தகங்களை அடிப்படையாக கொண்டு புதிய பாடத்திட்டத்தை ஏஐசிடிஇ கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x