Published : 05 Feb 2021 03:50 PM
Last Updated : 05 Feb 2021 03:50 PM

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தேதி அறிவிப்பு

சென்னை

பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் 13,858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தப் படிப்புகளுக்காக 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இப்படிப்புகளுக்கு 38,244 பேர் விண்ணப்பித்ததில் 37,334 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும் 10-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இத்தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலைக் காண: https://tnmedicalselection.net/news/04022021043750.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x