Published : 05 Feb 2021 02:37 PM
Last Updated : 05 Feb 2021 02:37 PM

பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வகுப்புகள் தொடங்கி முடியும் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடைப் படிப்புகளுக்கான அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளையும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதித்துள்ளது.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை படிப்புகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் 8-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முத மார்ச் 10-ம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையிலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் 23-ம் தேதி வரையும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

முதுகலை எம்.இ., எம்.டெக்., எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் நடைபெற்று வருகின்ற சூழலில், கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அரசு வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x