Published : 05 Feb 2021 12:34 PM
Last Updated : 05 Feb 2021 12:34 PM

பிப்.8 முதல் கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள்: அரசாணை வெளியீடு

சென்னை

கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி முதல், வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டன.

எனினும் முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

தொற்றுப் பரவல் குறைந்தபிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடித்துத் தேர்வுகளை நடத்த, வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையை உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x