Published : 02 Feb 2021 06:00 PM
Last Updated : 02 Feb 2021 06:00 PM

10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்: கால அட்டவணை வெளியானது

புதுடெல்லி

10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு பொதுத்தேர்வுகள் குறித்த விரிவான கால அட்டவணை இன்று மாலை வெளியானது. இந்த அட்டவணையை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இதுகுறித்து அண்மையில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ''பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு எழுத்து முறையிலேயே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது. 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் நடத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (பிப்.2-ம் தேதி) வெளியிட்டார். அதன்படி, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஷிஃப்டுகளாக தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெறும்.

அதேபோல 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஒரே ஷிஃப்டாக காலையில் மட்டும் நடைபெற உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x