Published : 02 Feb 2021 02:33 PM
Last Updated : 02 Feb 2021 02:33 PM

10, 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு?- பள்ளிக் கல்வித்துறை முடிவு

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. 10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கெனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட்டது. 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படாமல், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பிப்.8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 35 முதல் 40 சதவீதம் வரை தமிழக அரசு குறைத்தது. இதன் அடிப்படையில் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது. அண்மையில் அமைச்சர் செங்கோட்டையனும் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வர உள்ளதால், பொதுத்தேர்வுத் தேதிகள் குறித்துத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை மே கடைசி வாரத்திலோ ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கலாம் என்றும் ஜூன் மாதம் கடைசி வரை பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும், தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x