சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போராட்டக் களத்தில் நடத்தப்பட்ட வகுப்புகள்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போராட்டக் களத்தில் நடத்தப்பட்ட வகுப்புகள்.

கல்விக் கட்டண உத்தரவு வரும்வரை போராட்டம் தொடரும்: 53-வது நாளில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறிவிப்பு

Published on

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 53-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்விக் கட்டண உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி 53-வது நாளாகப் பல்வேறு நூதன முறைகளில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதேபோல, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காணொலி மூலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். புவனகிரி திமுக எம்எல்ஏ சரவணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்

இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக அரசு, உயர்கல்வி நிர்வாகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறை நிர்வாகத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஆனால், கல்விக் கட்டணம் குறித்து அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் (ஜன.30) 53-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ''உயர் கல்வித்துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனாலும், கல்விக் கட்டணம் குறித்த அரசாணை வரும்வரை எங்களது போராட்டம் தொடரும்'' என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in