Published : 30 Jan 2021 12:38 PM
Last Updated : 30 Jan 2021 12:38 PM

ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன.

ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனுமதியை ஆந்திர அரசு வழங்கியுள்ளது. நாள் முழுவதும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இதுகுறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதன்படி மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரவேண்டும். குழந்தைகள், ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதிக மாணவர்கள் இருக்கும் சூழலில் மாற்று நாட்களில் வகுப்புகள் நடைபெற வேண்டும். கை கழுவுதல், தனிமனித இடைவெளி மற்றும் பிற கோவிட்-19 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 157 பேர் குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x