Last Updated : 29 Jan, 2021 05:14 PM

 

Published : 29 Jan 2021 05:14 PM
Last Updated : 29 Jan 2021 05:14 PM

இஸ்ரோவுக்காக கோவை மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்: பிப். 22-ல் விண்ணில் பாய்கிறது

செயற்கைக்கோளை உருவாக்கிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர் குழுவுடன், கல்லூரி நிர்வாகத்தினர்.

கோவை

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியானது தங்கள் மாணவர்களைக் கொண்டு, 'ஸ்ரீ சக்தி சாட்' என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் வரும் பிப். 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இதற்காகக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைத்தளக் கட்டுப்பாட்டு மையத்தை, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் இணையம் வழியாகத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் செ.தங்கவேலு கூறியதாவது:

’’எங்களது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற எங்களின் நீண்ட நாள் கனவு இப்போது நிஜமாகின்றது.

மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துக்குப் பலம் சேர்க்கும் வகையிலும் புதிய முயற்சியாக, இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. இம்மையம் தனியார் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதற்கான பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது.

ஒற்றைச் சாளர வசதி மூலம் அலைக்கற்றை இட ஒதுக்கீடு, விண்ணில் செலுத்தும் முன் செயற்கைக்கோளைப் பதிவு செய்வது, செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது போன்ற அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தேவையான அனுமதிகளைப் பெறும் வசதிகளை எளிதாக்கியிருக்கிறது. இது எங்களின் 10 ஆண்டு கனவைச் சாத்தியமாகியுள்ளது.

ரூ.2.5 கோடியில் தயாரிப்பு

2010-ம் ஆண்டில், எங்கள் கல்லூரியிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தோம். அன்றிலிருந்து சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற புதுமுயற்சியுடன் செயல்பட்டோம்.

எங்கள் செயற்கைக்கோள் வடிவமைப்புக் குழு, 3 பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, தலைவராக மாணவர் நிகில் ரியாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்டு, 12 மாணவர்கள் கொண்ட 'விண்வெளி 4.0' குழு ஏற்படுத்தப்பட்டு, செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.

ரூ. 2.5 கோடி மதிப்பில் 'ஸ்ரீ சக்தி சாட்' என்று பெயரிடப்பட்டு இந்த PSLV C-51 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 460 கிராம் மட்டுமே எடையுள்ளது. ஆனால், 10 கிலோ வரை எடையுள்ள மற்ற நானோ செயற்கைக்கோள்களைப் போலச் செயல்படும் திறன் கொண்டது. இது பூமியிலிருந்து 500 - 575 கி.மீ. தூரத்தில் சுற்றுவதால் லியோ செயற்கைக்கோளாகவும் உள்ளது.

22-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

விண்வெளியில் நடக்கும் அனைத்து விதமான இணையம் சார்ந்த செயல்பாடுகளையும் நிகழ்த்தும் திறன் கொண்டது. விண்வெளியில் இணையம் சார்ந்த தகவல்களை விவரிப்பதற்கான செயல்முறை விளக்கமளிக்கும் தொழில்நுட்பமாகவும், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகவும் செயல்படும்.

தண்ணீர்க் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயுக் கசிவு போன்றவற்றைக் கண்டறிவதற்கும், அதன் வால்வுகளைத் திறந்து மூடுவதற்கும், இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம். இதேபோல் காட்டுத்தீயை அணைப்பதற்கோ அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கோ இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம்.

வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்புப் பகுதிகளில் நிகழும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வரும் பிப். 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது’’.

இவ்வாறு செ.தங்கவேலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x