Published : 27 Jan 2021 03:16 PM
Last Updated : 27 Jan 2021 03:16 PM

பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டது கேந்திரிய வித்யாலயா சங்கதன்

கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 10-ம் வகுப்பு நீங்கலாக 3 முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் நடைபெற உள்ளன. இணைய வசதி இல்லாத அல்லது தொழில்நுட்பச் சிக்கல் உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.

வாய்ப்புள்ள அனைத்துப் பகுதிகளிலும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறும். பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். வாய்ப்பில்லாத இடங்களில் ஆன்லைன் மூலமாகவே பொதுத் தேர்வுகள் இருக்கும்.

செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ஆஃப்லைன் மூலமாகவே நடக்கும். வாய்ப்பில்லாத போது ஆன்லைன் மூலமாக நடைபெறும். அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியாகும்.

9 மற்றும் 11-ம் வகுப்புக் கேள்வித் தாள்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ கேள்வித் தாள்களின் மாதிரி வடிவத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 1 மணி நேரம் தேர்வும் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரத் தேர்வும் 9 முதல் 11-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 3 மணி நேரங்களும் தேர்வு நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x