Published : 23 Jan 2021 03:00 PM
Last Updated : 23 Jan 2021 03:00 PM

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வரும் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தில் 10 மாதங்கள் கழித்து பள்ளிகளைத் திறந்து மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு நோய் எதிர்ப்பு சக்திக்கான வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை அரசு வழங்கி வருவதை உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். இதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோய்த்தொற்று அண்டாமல் பாதுகாக்க முடியும்.

இவ்வேளையில் மாணவர்களுக்கு மட்டும் தரும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் அனைவருக்கும் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் மாணவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கும் இன்ன பிற ஊழியர்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

வந்தபின் காப்பதைக் காட்டிலும் வருமுன் காக்கும் வகையில் தமிழக அரசு, அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்ன பிற ஊழியர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x